ஆறு தரிசனங்களின் தத்துவ வாதங்கள்
=====================================
=====================================
இந்திய ஞான மரபில் வரும் தரிசனங்களின் எண்ணக்கருவினைகள், கொள்கைகள்,கோட்பாடுகள் தத்துவ வாதமாக எழுந்தன. அவைகளை பற்றிய ஒரு சிறு முன்னுரையே இந்த பகுதியாகும்.
1. கருத்துவாதம்
-----------------------------
-----------------------------
நாம் காணும் புற உலகம் அனைத்தும் நம் எண்ணங்களால் உருவான கருத்தே ஆகும். புற உலகம், பொருள் இவை அனைத்தும் பொறிகள் வாயிலாக அறிவதும், அதனை ஆராய்வதும் என அனைத்தும் நம் எண்ணங்களே. நம் ஆத்மாவின் நேரான தொடர்பு இல்லாமல் போவதினால் புற உலகம் உண்மையில் இருக்கிறது என்பதும், அப்படியே இருந்தாலும் அது நாம் கருதுவது போல்தால் உள்ளது என்பது சாதிக்க முடியாததாகின்றன. இதை மிக விரிவாக ஆராய்ந்ததின் பேரில் கருத்து மட்டுமே உண்மை என்ற நிறுவியதே "கருத்து வாதம்" ஆகும்.
2. மெய்மைவாதம் (அ) யதார்த்த வாதம்
---------------------------------------------------------------
---------------------------------------------------------------
"கருத்து வாதம்" என்னும் கோட்பாட்டை தர்க்க ரீதியாக மறுத்து உலகம்,நிகழ்வு,பொருள் இவை அனைத்தும் கருத்தல்ல அவை புறத்தே மெய்யாகவே உள்ளன என கொள்வதே "மெய்மைவாதம்" ஆகும்.
3. ஒருமைவாதம்
-----------------------------
-----------------------------
கருத்து வாதத்தின் விளைவு "ஒருமைவாதம்" என சொல்லலாம். இவ்வுலகம் அனைத்தும் நம் எண்ணம் என முடிவுக்கு வரும்போது சகல உலகமும் தோற்றத்தின் காரணம் நம் ஆத்மா என்ற ஒரேயோரு மூலப்பொருளில் அடங்கும். அந்த ஒன்றே தோற்றதிற்கான காரணம் என முடிவதே "ஒருமை வாதம்" ஆகும்.
4. பன்மைவாதம்
----------------------------
----------------------------
மெய்மை வாதத்தின் விளைவு "பன்மை வாதம்" என சொல்லலாம். ஏன் எனில் புற உலகம், பொருள், நம் ஆன்மா இவை அனைத்தும் உண்மையே என்ற நிலைக்கு வருவதினால் இவை தோற்றத்திற்கான காரணம் பல பொருள் என அடங்கும். அதுவே "பன்மை வாதம்" ஆகும்.
5. அநாத்மவாதம் - நைராத்மியவாதம்
------------------------------------------------------------
------------------------------------------------------------
மாற்றம் ஒன்றுதான் உண்மை. அதுவே தொடர்ச்சியாக,இடையிறாது நடந்துகொண்டிருக்கிறது. இங்கு மாற்றம் என்பது அழிதல்,நீங்குதல், தோன்றுதல் என பொருள் கொள்ளவேண்டும். மாற்றம் நிகழ்ந்தது எனில் "முன் இருந்தது அழிந்து வேறோன்று தோன்றியது" என்றாகும். இப்படி குண இயல்புகளுடன் கூடிய ஒரு தொகுப்பையே நாம் உயிர், உடல் என குறிப்பதாகும். இங்கு நிலையான ஆத்மா என்ற ஒன்று இல்லை ஆதலால் நிலைபேறு என்பது பொய், மாற்றம் மட்டுமே உண்மை என்பதே முடிவாகும். இந்த கொள்கையே "அநாத்மவாதம் அ நைராத்மியவாதம்" ஆகும்.
6. ஆத்மவாதம்
--------------------------
--------------------------
அநாத்மவாத கொள்கையின் நேர் எதிரான கொள்கையே ஆத்மவாதம். அதாவது உண்மைபோல் காணப்படும் இந்த மாற்றங்களுக்கு அடியில் இம்மாற்றங்களால் பாதிக்கப்படாத நீலையான பொருள் உண்டு. அதுவே ஆத்மா ஆகும். அது மாறுவதாக காணப்படுவதே "மாயை" என்பதாகும். இந்த கொள்கையே "ஆத்மவாதம்" ஆகும்.
7. காரண காரிய வாதம்
---------------------------------------
---------------------------------------
ஒவ்வொரு காரியத்துக்கும் ஒரு காரணம் இருந்தாக வேண்டும்."எள்" காரணம் "எண்ணெய்" காரியம், "மண்" காரணம் "பானை" காரியம். ஒரு பொருள் எங்கிருந்து வந்தது என கேள்விக்கான விடை ஒரு தத்துவ விளக்கமாக உருவாகும். அதுவே காரண காரிய வாதம் ஆகும்.
8. சத்காரிய வாதம்
-------------------------------
-------------------------------
எந்த ஒரு காரண நிலையிலும் காரியம் உண்டு என எடுத்துரைப்பது சத்காரிய வாதம் ஆகும். அதாவது காரியம் புதிதாக தோன்றுவது அல்ல அது காரண நிலையில் உறைந்துள்ளது என்பதை எடுத்துரைப்பதே "சத்காரியவாதம்" ஆகும். பானை என்பது ஏற்கனவே மண்ணிலுள் உள்ளது, இல்லை எனில் மண்ணிலிருந்து பானையை உருவாக்க முடியாது என்பதே "சத்காரியவாதம்" ஆகும்.
9. அசத்காரியவாதம்
----------------------------------
----------------------------------
காரணத்தில் காரியம் உறைவதில்லை என்பதும், காரியம் புதிதாக தோன்றுவது என சத்காரியவாதத்திற்க்கு மறுத்து எடுத்துரைப்பது அசத்காரியவாதம் ஆகும். மண்ணில் பானை உறைந்துள்ளது எனில் நேராக மண்ணை வைத்து உலை வைத்துவிடலாமே. உருவம் என்பது காரணத்தில் இல்லை எனில் காரியம் புதிதாக தோன்றியது என ஏற்றாக வேண்டும் என்பர் அசத்காரியவாதிகள்.
10. பிரமபரிணாமவாதம்
--------------------------------------
--------------------------------------
பிரம்மம் உண்மை. பிரம்மம் உண்மையாகவே மாறி உலக சிருஷ்டி நிகழ்கின்றது. அதாவது காரணமும் உண்மை, அதிலிருந்து வந்த காரியமும் உண்மை. ஆதலால் பிரம்மம் உண்மை, அதிலிருந்து தோன்றிய உலகமும் உண்மை. இக்கொள்கை கொண்டதே "பிரம பரிணாம வாதம்" ஆகும்.
11. சூன்யவாதம்
--------------------------
--------------------------
பிரமபரிணாம வாதத்திற்க்கு நேர்மாறான கொள்கையே "சூன்யவாதம்" ஆகும். காரணமும் உண்மை அல்ல, காரியமும் உண்மை அல்ல, பிரம்மம் உண்மை அல்ல. உலகம் உண்மை அல்ல. அதாவது, உள்ளது என ஒன்றுமே இல்லை என கருத்தை முன் நிறுத்தி வழங்குவதே "சூன்ய வாதம்" ஆகும்.
12. விவர்தவாதம்
----------------------------
----------------------------
ஒரேயொரு பொருள்தான் உண்மை அது பிரம்மம். உலகம் சடப்பொருள். பிரம்மம் சித்து பொருள் அதாவது அறிவே சொருபமான பொருள். அதிலிருந்து ஒரு சடப்பொருளான உலகம் உருவாவது அறிவுக்கு நேர்மாறானது. அதனால், சிருஷ்டியால் இவ்வுலகம் பிரம்மத்திலிருந்து உருவாவது போன்று காணப்படுகிறதே ஒழியே உண்மையில் பிரம்மத்தில் மாற்றம் ஏதுவும் ஏற்படுவதில்லை. அதாவது, ஒரு பொருள் இன்னொன்றாக மாறாமலிருந்தபடியே மாறிவிட்டதாக காணப்படுவதே "விவர்தவாதம்" ஆகும்.
இத்துடன் இந்திய தத்துவ பிரிவுகளில் அதிகமாக கையாளப்படும் தத்துவ வாதங்களே மேலே குறிப்பிடப்பட்டுள்ளன். மேலும் ஒவ்வொரு தத்துவ பிரிவுகளில் உட்பிரிவுகளை பார்க்கும்போது மேலும் சில தத்துவ வாதங்களை காணமுடியும். அவைகளை அந்தந்த தத்துவ பிரிவுகளை விரிவாக காணும்போது விளக்கினால் பொருந்தும் என கருதி இங்கே விளக்கப்படவில்லை.