Monday, 9 July 2018

ஆறு தரிசனங்கள் - 05

1.சாங்கியம்
===========
சாங்கிய தரிசனத்தை முதலில் முறைப்படுத்தியவர் 'கபில முனிவர்'.
சாங்கியம் கூறும் மூல காரணம்
=============================
இப்பிரபஞ்சம் தோற்றத்திற்க்கு மூல காரணம் அறிவா? அல்லது பொருளா? என்ற கேள்விக்கு இரண்டுமே என சமநோக்கு பார்வை கொண்ட தரிசனம் சாங்கியம் ஆகும்.
சாங்கிய கோட்பாட்டின் படி அறிவு எனப்படுவது ஆக்கம், அழிவு, மாற்றம் இதற்க்கு அப்பாற்பட்டது, அதை முறையே 'புருஷன்' எனவும், அறிவற்ற ஆனால் இயங்ககூடியதான பொருட்கள் அனைத்தும் முறையே 'பிரகிருதி' எனவும் கொள்கிறது.
சாங்கியம் ஏற்கும் பிரமாணங்கள்
===============================
சாங்கியம் மூன்று பிரமாணங்களை அடிப்படையாக கொண்டது அவை பிரத்தியட்சம், அநுமானம் மற்றும் ஆப்த வாக்கியம் ஆகும். சாங்கியம் கடவுள் இருப்பை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் ஆப்தவாக்கியத்தை ஒரு பிரமாணமாக கொண்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
சாங்கிய தரிசனத்தின் தத்துவ மையம்
===================================
ஆக, மாற்றம் அடையக்கூடிய பிரகிருதியும், மாற்றம் அடையாத புருஷனும் சேர்ந்த இணைப்பே இவ்வுலகம் தோன்றுவதற்க்கு, ஒடுங்குவதற்க்கும் மூலம் ஆகும். இம்மூலப்பிரகிருதியில் இருந்து இவ்வுலகம், இயற்கை எவ்வாறு தோன்ற முடியும் என்ற கேள்விக்கு பதில் சொல்லும் சாங்கிய கொள்கையே "சத்காரியவாதம்" ஆகும். மேலும், பிரகிருதியினால் உருவான இப்பொருட்கள் அனைத்து முக்குணங்களால் ஆனவை. அவை சத்வ, ரஜோ, தமோ ஆகும் இங்கு குணம் என்பது பகுதி என குறிப்பிடப்படுகின்றது. புருஷன் அறிவே சொரூபமான பேரறிவு ஆகும். இப்புருஷன் ஒன்று அல்ல பல வாகும். சாங்கிய தத்தவங்களின் படி புருஷன் செயலை புரிவதல்ல, அனுபவிப்பது மட்டுமே, இதனால் புருஷன் ஒரு போக்தா மட்டுமே. போக்தா என கருதப்படும் புருஷன் பிரகிருதியுடன் கொண்ட இணைப்பின் காரணமாக ஏற்பட்ட அறியாமையினால் இப்பிரகிருதியினால் உருவான உடலை தன் உடலாக நினைத்துக்கொள்கிறது இதனால் துயரங்களையும் அடைகிறது.
சாங்கியம் தரிசனத்தின் முடிவு
=============================
அறியாமையினால் போக்தாவாக பிரகிருதியினால் ஏற்பட்ட உடலை கொண்டு உயிராக இருக்கும் புருஷன் இதிலிருந்து விடுபட உயிராக இருக்கும் தனக்கும், உடலாக இருக்கும் பிரகிருதிக்கும் உள்ள வேறுபாட்டை பிரித்தறியே வேண்டும். இந்த விடுதலையே சாங்கியம் கூறும் முக்தியாகும்.

No comments:

Post a Comment