Monday, 9 July 2018

ஆறு தரிசனங்கள் - 06

2.யோகம்
=========
யோக தரிசனம் முன்பே இருந்திருந்தாலும் இதை முதலில் வரையறுத்தவர் 'பதஞ்சலி முனிவர்'.
யோகம் கூறும் மூல காரணம்
============================
யோக தரிசனம் சாங்கிய தரிசனத்தின் நீட்சியாகவே கருதப்படுகிறது. இதை ஒருங்கே இணைத்து பார்ப்பதற்க்கான காரணம் அதன் அடிப்படை தத்துவங்களின் ஒற்றுமையே ஆகும். சாங்கிய தரிசனத்தின் அடிப்படை தத்துவமான "புருஷன்" மற்றும் "பிரகிருதி" இரண்டையும் ஏற்றுக்கொள்வதோடு முன்றாவதாக "ஈஸ்வரன்" எனும் "விசேஷ புருஷன்" ஒன்று உளன் என்பதை ஏற்றுக்கொள்கிறது. இதனால் யோகத்தை "சேஸ்வராத சாங்கியம்" எனவும், சாங்கியத்தை "நீரீஸ்வர சாங்கியம்" எனவும் கூறுவர்.
யோக தரிசனத்தின் தத்துவ மையம்
==================================
இங்கே யோகம் என்பது "பிரிதல்" எனும் பொருள் கொண்டது. அதாவது "புருஷன்" தன் நிலை மறந்து பிரகிருதியின் உடலில் இணைந்து இருப்பதால், பிரகிருதியை விட்டு பிரிந்து தன் நிலையை உணர்வதயே வலியுறுத்துகிறது. அதோடு ஈஸ்வரன் - விசேஷ புருஷன் என்ற தத்துவத்தையும் முன்னிருத்துகிறது. யோக தரிசனத்தை பொறுத்தவரை இறைவன் படைப்பவன் அல்ல, எல்லாம் அறிந்தவன் அதேபோல் பிரகிருதியின் படைப்புக்கு துணை புரிபவன் மட்டுமே. "புருஷன்" பிரகிருதியின் இணைப்பில் அறியாமையால் இருப்பவன், "விசேஷ புருஷன்" அந்த இணைப்பில் ஒருபோதும் சேராமல் இருப்பவன்.
யோகம் கூறும் "அஷ்டாங்க யோக பயிற்சி"
========================================
சாங்கியம் புருஷன், பிரகிருதி என பகுத்தறிந்து அறியும் ஞானம் முக்திக்கு வழிவகுக்கும் என கூறுகிறது. யோகம் ஞானத்தோடு அந்த முக்திக்கான பயிற்சியையும் அளிக்கிறது. இதற்க்கு எட்டு விதிகள் வகுத்தது அதுவே "அஷ்டாங்க" யோகம் ஆகும். அவை, யமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணம், தியானம், சமாதி என்பதாகும்.
யோக தரிசனத்தின் குறிக்கோள்
==============================
சித்தி, சுத்தி ஏற்பட்டு நான் எனும் நினைவை ஒழித்தலே யோகம் கூறும் தியானம் ஆகும். அதற்கான பயிற்சியாக அஷ்டாங்க யோகத்தினை கடைபிடிப்பதால், புருஷன் தன் நிலை உணர்ந்து பிரகிருதியின் தளையிலிருந்து விடுபட்டு சமாதி நிலையின் "உறக்கம் அற்ற உறக்கம்" எனும் உணர்வை அடைகிறது. அந்த உணர்வை அடைய "விசேஷ புருஷன்" எனும் "ஈஸ்வரன்" துணைபுரியும். இதுவே யோகம் கூறும் "ஜிவன் முக்தி" யாகும்.

No comments:

Post a Comment